Tuesday, June 14, 2016

தெரிந்த ஹனுமான் தெரியாத விஷயங்கள்......!!!!

ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர் 
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு, ராமாயண கதை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா, என்று நினைக்க தோன்றும்.
ஆனால், அனுமாருக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது. அதனால் தான், அவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும் வணங்கி வருகிறோம்.
எப்படி இவரால், அதுவும் ஒரு குரங்காக இருந்து கொண்டு, இவ்வளவு சாதனைகள் செய்ய முடிந்தது? அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்.
அவர் தேவாம்சம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். சாதரண தேவருடைய அம்சமாக இருக்க வாய்ப்பில்லை. பின் யாருடைய அம்சம் இவர்?
சாஷாத் பரமேஸ்வரனுடைய அம்சம். அது என்ன கதை ? பார்ப்போமா....!!!!!
இடம்-கைலாசம்
சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை 
உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை 
பார்த்து கேட்டாள், “சுவாமி,நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”
சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி, 'ராம' என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது. ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து
ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“
இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். " தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார். பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றி
விவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் 
ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.
ஏன், குரங்கு அவதாரம்? 
பரமேஸ்வரன் விளக்குகிறார். ” மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும். எஜமானனை விட சேவகன் 
ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.
பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).
பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள். “சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன். நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு
உதவ முடியும்? ”,என்று கேட்டாள். சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக 
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.
ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.
ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.
இப்பொழுது, எப்படி அவதாரம் நடந்தது என்று பார்க்கலாம்.
3 உப கதைகள்:
சிவன் -மோகினி
ஒரு சமயம்,விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். சிவன், மோகினியின் ஆட்டத்தை ரசித்து, அவருக்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்தார்.
மோகினியான விஷ்ணு ”உங்களுடய ஆத்ம சக்தியின் முழு பலத்தையும் கொடுங்கள்”, என்று கேட்டார். சிவனும் அப்படியே தன் சக்தியை ஒரு விதையாக கொடுத்தார். விஷ்ணு சப்த ரிஷிகளை கூப்பிட்டு," இதை பத்திரமாக காப்பாற்றுங்கள். இதிலிருந்து ஒரு மஹா பலம் பொருந்திய மஹான் பிறக்க போகிறார். அவர் என்னுடைய ராமாவதாரத்தில் ராவண வதத்துக்கு துணையாக இருப்பார்.” என்று சொன்னார். அவர்களும் தக்க சமயத்தில் அந்த விதையை வாயு பகவானிடம் சேர்த்தனர்.
வாயு-அஞ்ஜனி
முன்னொரு சமயம் வாயு பகவான் ஜாலந்திரன் என்ற அசுரனை கொல்வதற்கு சிவனுக்கு உதவி செய்தார். அதற்காக சிவன்,
வாயுவுக்கு மகனாக பூலோகத்தில் பிறப்பேன், என்று வரம் கொடுத்தார்.
அஞ்ஜனி
அஞ்ஜனி, கேசரி என்ற குரங்கின் மனைவி. இந்த அஞ்ஜனி, சாதரண குரங்கு 
இல்லை. இவள், ஒரு தேவ மாது. பார்வதி தேவியின் பணிப்பெண். ஒரு சமயம், இந்த தேவ மாது இந்திரனை ஆயிரம் கண்ணுடையவன்
என்று கேலி செய்யப் போய், குரங்காக பிறக்க வேண்டிய நிலையை அடைந்தாள். சிவன், அவள் மேல் இரக்கப்பட்டு, அவள் வயிற்றில் அவர்
மகனாக பிறக்கிற பாக்கியத்தை, வரமாக அளித்தார்.
வாயுவுக்கு அஞ்ஜனியின் மேல் ஒரு ஈடுபாடு. சிவனுடைய விதையை 
அஞ்ஜனிக்கு கொடுக்க தீர்மானித்தார். அஞ்ஜனி சிவனை நினைத்து 
தியானம் செய்து கொண்டிருந்தாள். வாயு பகவான் சிவனுடைய விதையை அவள் காது வழியாக அவளுடைய கர்ப்பத்தில் சேர்த்தார்.
இப்பொழுது எல்லா முடிச்சும் அவிழ்ந்து விட்டதா?
இது தான்,பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த கதை. அதனால் தான், அனுமாரை சங்கர சுவன், கேசரி நந்தன், அஞ்ஜனி புத்திரன் என்று அழைக்கிறோம்.
இந்த அதிசய கூட்டணி- விஷ்னு அம்சமான ராமரும், சிவ அம்சமான அனுமானும்- நம்மை எல்லோரையும் காப்பாற்ற, வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.

காளியின் வரலாறு

தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாக தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.

தனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும், இளம் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் கேட்டான் தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது. அவனது ஆட்டம் அதிகமானது.

அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார்.

அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள்.

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள்.

சிவனால் தோற்றுவிக்கப்பட்ட காளிதேவி பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். வரதான சொரூபிணி, நிகம்ப சூதனி, யோகப்பிடாரி, தாண்டவக் காளி, சுகாசனக் காளி எனப் பல பெயர்கள் காளிதேவிக்கு உண்டு. பக்தர்களை இன்முகத்துடன் பத்திரமாகக் காப்பதால் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்




ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும்.

பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி ஏறிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம்.

சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை - ஏன் தெரியுமா?

ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார்.

எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை. 

கருத்தரிக்கும் காலம்...



                       தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின்கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்.

புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

கருத்தரிக்கும் காலம் பற்றி அகத்தியர்

“ஆண்மையென்று மங்கையர்கள் பூக்குங்காலம்

அன்றுமுதல் பதினாறு நாளும் அந்தத்

தாண்மையன்றிப் பதினாறு இதழாய் நின்ற

தாமரைப் போல் மலர்ந்திருக்குஞ் சாற்றக் கேளு

காண்மையின்றித் தின மொன்று இதழ்தா னொன்று

கருவான கருக்குழிதான் இந்நாட் குள்ளே

பான்மைஎன்ற விந்தங்கே யூரும்போது

பாயுமப்பா வன்னியொடு வாயு தானே”

அதாவது, மாதவிலக்கு சுழற்சி ஆன நாள் முதற்கொண்டு 14 நாட்கள் வரை, பதினாறுஇதழ்களுடைய தாமரையைப் போல் நங்கையின் பிறப்புறுப்புக்குள் ஜனன இந்திரியம்மலர்ந்திருக்கும்.

இது பதினைந்தாம் நாள் முதல்கொண்டு ஒவ்வொரு இதழாக மூடிக்கொண்டே வரும்.

இந்நாட்களுக்குள் அதாவது 15ம் நாள் முதல் 30ம் நாள் வரை கருவை அடைக்கலமாக வைத்திருக்கும்.

கருக்குழிக்குள் விந்து சென்றால் தாமரை மலர் மூடிக்கொள்வதைப்போல் தினமும் ஒவ்வொரு இதழாய் மூடிக்கொண்டே வரும்.

திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால்,மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.

நாத அணுவும், விந்து அணுவும் ஒன்று சேர்வதே கரு உருவாதலாகும்.

விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் 2-4 மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது.

விந்தணு உருவாக 74 நாட்கள் ஆகும்.

விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும். ஆனால் 24-48 மணி நேரத்தில் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது.

விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளது.

நாதம் (சினைமுட்டை)

சினைமுட்டையானது பெண்ணின் சினைப் பையிலிருந்து வெளியாகும். இதன் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம்.

சினை முட்டை வட்ட வடிவமுடையது. 0.2 மி.மீ அளவாகும்.

சினை முட்டை, சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது.

கருத்தரிக்கும் காலம்

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்துகரு உண்டாகும்.

சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையைஅடைய வேண்டும்.

கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள்

1. தேதிகொண்டு அறியமுடியும் -

மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும்.

பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக்கும்.

மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும்காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30 நாட்கள்உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

2. யோனிக்கசிவு அதிகரித்து காணும்

யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சிமுழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக் கசிவுஅதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம்.

கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள்எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன் இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.

3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன்அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30இ அளவு உயர்கிறது. இதை வைத்து கருவுறஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம்.

12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவைஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின் நோயின் தாக்குதல்இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும்வாய்ப்புகள் கூடும்.

Monday, May 30, 2016

தாய்மைக்கால பராமரிப்பு

தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.

"பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"

- அகத்தியர் -

தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.

மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.

நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.

எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.

தாய்மை அடைதல்.!

தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.

இனி தாய்மை அடைதல் குறித்த சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.

நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர். மேலும் பெண்களிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தால் தாய்மை அடைவதில் தடையாகும் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

"இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை
எதுனால் மலபான சேதி கேளு கேளு
அசைந்திருக்கும் பேயினால் பூதத் தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்
பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்
பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்
துசங்கட்டிக் கல்வியினால் பூலவா துங்கித்
துலங்காமல் கெர்ப்பமில்லைசொல்லக் கேளே"

- அகத்தியர் -

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை., பேய், பூதம், அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவகளால் கர்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசுவெண்ணெய் பாக்களவு சேர்த்து மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வேப்பம் பூ, சீந்தில்தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை இரண்டு வேளையும், மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்பப்பூச்சி, தோடம், விடக்கிரம் ஆகியவையும் தீரும் என்கிறார். இதற்க்கும் எந்த பத்தியமும் சொல்லப்பட வில்லை.

இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.